Friday, August 15, 2014

மகாத்மா காந்திஜியின் பற்றி பரவலாக தெரியாத உண்மைகள்

மகாத்மா காந்திஜியின் பற்றி பரவலாக தெரியாத உண்மைகள்

சிறுவயதிலேயே காந்திஜியிடம் வீரம், வெளிப்படையாகப் பேசும் பண்பு போன்றவை இருக்கவில்லை. அவர் சிறு வயதில் மிகுந்த கூச்ச சுபாவம் கொண்டராக இருந்துள்ளார். பிறருடன் பேச வெட்கப்பட்டு, பள்ளியிலிருந்து வீட்டுக்கு ஓடி வந்துள்ளார். 

நடப்பதில் ஆர்வம் கொண்டவர். ‘உடற்பயிற்சிகளின் இளவரசன் நடைபயிற்சி’ என்று அவர் அவ்வப்போது குறிப்பிடுவது வழக்கம். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதிலிருந்து அவருக்கு நீண்டதூரம் நடப்பது மிகவும் பிடிக்கும். லண்டனில் சட்டம் படித்துக் கொண்டி      ருந்தபோது, தினமும் 810 மைல் தூரம் நடப்பதை வழக்கமாக  கொண்டுள்ளார். 1930ம் ஆண்டு, சபர்மதி ஆசிரமத்திலிருந்து தண்டி நோக்கி, தனது 60வது வயதில் 241 மைல் தூரத்தை நடந்தே கடந்தார். 

காந்திஜியின் முதல் ரேடியோ உரை, 1931ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்தபோது ஒலிபரப்பானது. அமெரிக்க மக்களுக்காக அவர் ரேடியோவில் பேசினார். அவரின் முதல் பேச்சு, ‘இந்த விஷயத்தை நான் பேசலாமா?’ என்று ஆங்கிலத்தில் தொடங்கியது.

ஒருமுறை ரெயிலில் ஏறும்போது, ஒரு காலில் அணிந்திருந்த செருப்பு கழன்று தண்டவாளங்களுக்கு இடையே விழுந்துவிட்டது. அடுத்த கணமே, தன் மற்ற கால் செருப்பையும் கழற்றி கீழே போட்டுவிட்டு மேலே ஏறினார். ஒருகால் செருப்பை கண்டெடுப்பவர்களுக்கு அந்த செருப்பால் எந்த பயனும் இல்லை என்பதால் தன் மற்றொரு கால் செருப்பை அவர் கழற்றிப் போட்டார்.

காலம் தவறாமையை கண்டிப்புடன் காந்திஜி கடைபிடித்தார். அதற்காக அவர் தன் இடுப்பில் டாலர் கடிகாரம் ஒன்றைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்.  படுகொலை செய்யப்பட்ட 1948ம் ஆண்டு ஜனவரி 30ந் தேதி அவர் சற்று மனவேதனையுடன் இருந்துள்ளார். ஏன் என்று நெருக்கமானவர்கள்
கேட்டபோது, அன்றைய இறை வணக்கத்திற்கு 10 நிமிடம் தாமதமாகப் போனதற்காக காந்திஜி வருத்தம் அடைந்துள்ளார்.

காந்திஜி வழக்கறிஞர். அந்த தொழிலில் 20 ஆண்டுகள் அவர் இருந்துள்ளார். எனினும், பெரும்பாலான வழக்குகளில் இரண்டு தரப்பினரையும் அழைத்து பேசி சமரச தீர்வு கண்டுவிடுவார். ‘இதனால் நான் எதையும் இழக்கவில்லை. என் ஆத்மாவையும் இழக்கவில்லை’ எனக் குறிப்பிடுகிறார்.

 1948ம் ஆண்டு காந்திஜியின் உடலைச் சுமந்து சென்ற பீரங்கி வண்டி, 1997ல் அன்னை தெரசா உடலையும் சுமந்து சென்றது.

 நோபல் அமைதி விருதுக்கு 1948ம் ஆண்டு காந்திஜி
தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். துரதிருஷ்டவசமாக அந்த ஆண்டில் அவர் படுகொலை செய்யப்பட்டதால், நோபல் பரிசுக்குழு அந்த ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்தது. 

வயதான பிறகு காந்திஜி, பல் செட் அணிந்திருந்தார். அதை அவர் எப்போதும் அணிவதில்லை. சாப்பிடச் செல்லும்போது மட்டும் பொருத்திக் கொள்வார். சாப்பிட்டு முடித்ததும் அதை சுத்தப்படுத்தி, துடைத்து தன் இடுப்பு துணியில் பத்திரமாக வைத்துக் கொள்வார்.

காந்திஜி பேசும் ஆங்கிலம், ஐரிஷ் (அயர்லாந்து) பேச்சு வழக்கில் இருக்கும். இதற்கு காரணம், அவருக்கு முதலில் ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தவர்கள் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்கள்.

சுதந்திரப் போராட்டத்தில் அவர் ஈடுபட்டிருந்த காலத்தில் இடுப்பில் மட்டும் அவர் துணியணிந்திருந்தார். ஆனால், லண்டனில் அவர் இருந்தபோது பட்டுத் தொப்பி, கணுக்காலுறை, கையில் பிரம்பு வைத்திருந்தார்.

லண்டன் பல்கலைக்கழகத்தில் படித்து அவர் அட்டர்னி ஆனார். நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் முதலில் வாதாடும்போது, அவர் கால்கள் நடுங்கின. வாய் குளறியது. என்ன பேசுவது என்று தெரியாமல் குழம்பிய அவர் தோல்வியில் கீழே உட்கார்ந்துவிட்டார்.

தென் ஆப்பிரிக்காவில் அவர் வசித்த காலத்தில் அவரின் ஆண்டு வருமானம், 15,000 டாலர். இந்த தொகை, இப்போதுகூட பல இந்தியர்களின் கனவுத்தொகையாக உள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் அவர் பணத்தை குவித்தாலும் அவருக்கு மகிழ்ச்சியில்லை. காரணம், அவரின் சகஇந்தியர்கள், அங்கே வறுமையில் வாடினர். பசி, பட்டினியால் துவண்டிருந்தனர். அவர்களின் பசி, பிணியைப் போக்க தன் வருமானத்தின் பெரும் பகுதியை காந்திஜி செலவிட்டார். 

ஒருசமயம் காந்திஜி தன்னை சந்திக்க வந்திருந்த ஒருவருக்கு 35 ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது தன் அருகில் இருந்த தனிச் செயலாளர் வி.கல்யாணத்திடம் கடனாக அந்த தொகையை பெற்று, வந்திருந்தவருக்கு கொடுத்தார். பின்னர் கல்யாணத்துக்கு பணம் கொடுக்க காசோலையாக வழங்கினார். காந்திஜி 2011948 அன்று வழங்கிய காசோலையை கல்யாணம், 2911948 அன்று பணம் பெறுவதற்காக வங்கியில் செலுத்தினார். மறுநாள் (3011948) மகாத்மா காந்திஜி துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். காந்திஜி கடைசியாக கொடுத்த அந்த காசோலையை வங்கி கணக்கில் சேர்க்காமல் திருப்பி வாங்கிய கல்யாணம், அதை விலை  மதிக்கமுடியாத பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு விலைமிக்கது அது. 

நோபல் பரிசு பெற்ற 5 உலகத் தலைவர்களான, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (அமெரிக்கா), தலாய் லாமா (திபெத்), ஆங் சான் சூ கியி (மியான்மர்), நெல்சன் மண்டேலா (தென் ஆப்பிரிக்கா) மற்றும் அடோல்போ பெரஸ் எஸ்க்யுவெல் (அர்ஜென்டினா) ஆகியோர், தாங்கள் மகாத்மா காந்தியின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். 

காந்திஜிக்கு புகைப்பட கலைஞர்களைக் கண்டாலே பிடிக்காது. புகைப்படம் எடுப்பதையும் விரும்பாதவர் அவர். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த காலத்தில் அதிகமாக புகைப்படம் எடுக்கப்பட்ட தலைவரே அவர்தான்.

மனித வடிவில் வந்த இயேசு மாண்டது வெள்ளிக்கிழமை. காந்தியடிகள் பிறந்தது வெள்ளிக்கிழமை. இந்தியா விடுதலை பெற்றது வெள்ளிக்கிழமை. தேசப்பிதா மகாத்மா காந்திடிகள் இறந்ததும் வெள்ளிக்கிழமைதான்.

காந்தியடிகளைக் கவுரவப்படுத்தும் வகையில் முதன்முதலில் அவருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட வெளிநாடு அமெரிக்கா. ஜனவரி 26, 1961.

1915ம் ஆண்டு ஒரு சமயம் சாந்திநிகேதனுக்கு காந்தியடிகள் சென்று கவிஞர் ரவீந்திரநாத் தாகூரைப் பார்த்து நமஸ்தே குருதேவ் என்று கைகூப்பி வணக்கம் சொன்னார். உடனே தாகூர், நான் குருதேவ் என்றால் நீங்கள் மகாத்மா என்று சொல்லி வணங்கினார். இதுவே, காந்தியடிகளுக்கு மகாத்மா என்ற அடைமொழி அமையக் காரணமான நிகழ்ச்சி.



மகாத்மா தனது வாழ்நாளில் ஒருமுறைகூட விமானப்பயணம் மேற்கொண்டதில்லை. 

காந்திஜிக்கு டாக்குமென்டரி படம் எடுத்த முதல் நபர் ஏ.கே.செட்டியார் என்ற தமிழர். கடைசி வரை காந்தி பக்தராகவே வாழ்ந்து விளம்பரம் இன்றி பணிசெய்து மறைந்து போனார்.

இந்தியாவின் முதல் சுதந்திர தினமான 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாளை காந்தியடிகள் கொண்டாடவில்லை. அன்றைய தினம் வாழ்த்துச் செய்திகூட மகாத்மா அனுப்பவில்லை. மாறாக, வகுப்புவாத கலவரங்களினால் மனம் நொந்து காணப்பட்டார்.

காந்திஜி இரண்டு விஷயங்களுக்கு வருந்துவதுண்டு. ஒன்று, அவருடைய கையெழுத்து கிறுக்கலாக, எளிதில் புரியாமலிருக்கும் என்பது. இன்னொன்று, தம்மிடமிருந்த ஒரு கெட்ட பழக்கமான, யாரையாவது உடம்பைப் பிடித்து விடச் சொல்வது. அதாவது மசாஜ் செய்து கொள்வதைத் தனது கெட்ட பழக்கமாக காந்தி குறிப்பிட்டார்.

கிழிந்த துணிகளைத் தானே தைத்துக் கொள்வார் காந்திஜி. ஒருவர் எவ்வளவுதான் வறுமையில் இருந்தாலும் உடுத்துகின்ற உடைகள் மிக து£ய்மையாக இருக்க வேண்டும் என்று காந்திஜி விரும்புவார். அதை அவர் கடைசி வரை கடைபிடித்தார்.

Thursday, August 14, 2014

விஞ்ஞானி நிகழ்த்திய அதிசயம்; ஒரு மரத்தில் 40 வகையான பழங்கள் (photo)

ஒரே மரத்தில் 40 வகையான பழங்களை உருவாக்கி அமெரிக்க விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.
sam_van_aken_harvest8
அமெரிக்காவில் உள்ள சைரகஸ் பல்கலைக்கழகத்தில் சாம் வான் அகேன்  தாவரவியல் பேராசிரியராக உள்ளார்.  விஞ்ஞானியான சாம் வான் அகேன் மரத்தில் பல்வேறு வகையான பழங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
sam_van_aken_harvest8
இந்த முயற்சி எப்படி என்றால் “ஒட்டு மாங்கனி’ என்ற முறையை பயன்படுத்தப்படுத்தி புளிப்பான மரத்தின் தண்டில், இனிப்பான மாம்பழத்தின் தண்டை ஒட்ட வைத்து சிறிது நாளில் புளிப்பான மாம்பழத்தை இனிப்பாக மாற்றுவர் அதேபோல்தான் இவரும்  ஒரே மரத்தில் பல்வேறு மரங்களின் தண்டுகளை படிப்படியாக இணைத்தும், சில மாற்றங்களை செய்தும் வளர்த்தார்.
sam_van_aken_harvest7
தற்போது அந்த மரத்தில் 40 வகையான பழங்கள் காய்த்து தொங்குன்றன. இந்த காட்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அழகான அந்த மரம் அனைவரையும் அருகில் ஈர்க்கும் வண்ணம் காட்சியளிக்கிறது.
sam_van_aken_harvest4
இதுகுறித்து சாம் வான் அகேன் கூறுகையில்,என்னுடைய ஆராய்ச்சியின் பயனாக, அம்மரத்தை குளிர்காலத்தில் பார்ப்பவர்களுக்கு செம்பழுப்பு, ஊதா மற்றும் வெள்ளை என வானவில்லை போல் காட்சியளிக்கும் என்றும், கோடை காலத்தில் அம்மரம் பல்சுவை கொண்ட பழங்களை வழங்குவதாகவும், இதுபோன்ற  தாவர ஆராய்ச்சியை தான் இனி அதிகமாக மேற்கொள்ளவுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
sam_van_aken_harvest5

sam_van_aken_harvest6

Tuesday, August 5, 2014

ஹால்மார்க் தங்கம்...சுத்த தங்கமல்ல!-உஷார் ரிப்போர்ட்

ஹால்மார்க் தங்கம்...சுத்த தங்கமல்ல!-உஷார் ரிப்போர்ட்



தங்க நகை வாங்கும்போது ஹால்மார்க் முத்திரை உள்ள நகையான்னு பார்த்து வாங்குங்கள் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால், இப்போது ஹால்மார்க் முத்திரையிட்ட தங்க நகைகள்கூட அசல் தங்க நகைகள் அல்ல என்று சொல்கிற அளவுக்கு சில விஷயங்கள் நடந்திருக்கின்றன.

இது என்ன, புதுக் குழப்பமாக இருக்கிறது என்கிறீர்களா? மேற்கொண்டு படியுங்கள்.

ஹால்மார்க் நகையை விற்பனை செய்யும் கடைக்காரர்களுக்கு பிஐஎஸ் (Bureau of Indian Standards)அனுப்பியுள்ள ஆணையின்படி, ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது தரக்குறைவு ஏற்பட்டால், அதற்கு நகை விற்பனை செய்யும் கடைக்காரர்தான் பொறுப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதிவு செய்த வழக்கில் இந்த ஆணைக்கு தற்காலிக தடை  வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான மற்ற விவரங்களை தெரிந்துகொள்ளும்முன், ஹால்மார்க் முத்திரை பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் குறித்து தங்க நகைமதிப்பீட்டாளர் மற்றும் ஜெம் அண்டு ஜுவல்லர் டெக்னாலஜி ட்ரைனிங் சென்டரின் இயக்குநர் கே.சுவாமிநாதன் விளக்குகிறார்.

''ஹால்மார்க் முத்திரை உள்ள நகைகளை விற்பனை செய்வதற்கு லைசென்ஸ் வாங்கியிருக்க வேண்டும். நகை தயாரிப்பாளர் செய்துதரும் நகையின் தரத்தை உறுதி செய்வதற்காக ஹால்மார்க் சென்டருக்கு அனுப்பி முத்திரை இட்டு வாங்க வேண்டும். இதில் தங்கம் எத்தனை கேரட்டில் உள்ளது என்பதை தெரிவிப்பதுதான் இந்த முத்திரை. அதாவது 23 (958), 22 (916), 21 (875), 18 (750), 17 (708), 14 (585) மற்றும் 9 (375) காரட் நகைகளுக்கும் இந்த முத்திரை போடப்படும். ஹால்மார்க் முத்திரை பதிக்கப்பட்டதால் மட்டும் தரம் உயர்ந்த தங்கம் என நினைக்கக்கூடாது. எந்த காரட்டுக்கான ஹால்மார்க் முத்திரை இடப்பட்டிருக்கிறது என்று பார்ப்பது அவசியம்.

ஹால்மார்க் முத்திரை போடுவதற்கு கட்டணம் உண்டு. அதாவது, ஒரு நகைக்கு ரூ.25   முதல் ரூ.150 வரை

கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நகையையும் தனித்தனியாக ஹால்மார்க் முத்திரை போட மாட்டார்கள். மொத்த மாக நகைகளை அனுப்புவார்கள். அனைத்து நகைகளையும் ஹால்மார்க் முத்திரை போட்டபின், அதிலிருந்து ஏதாவது ஒரு நகையை எடுத்து அதை டெஸ்ட் செய்வார்கள்.



0JC2hKW.jpg?1



அதாவது, தேர்ந்தெடுக்கப்படும் நகையை முதலில் உரைகல் மூலம்  உரசுவார்கள்.  அதன்பிறகு எக்ஸ்ஆர்எஃப் மெஷினில் சோதனை செய்வார்கள். இதில் இரண்டிலும் 916 தரத்தில் நகை இருந்தால், அடுத்த கட்ட சோதனை செய்வார்கள். தேர்ந்தெடுக்கும் நகையில் அனைத்து பாகங்களிலிருந்தும் தங்கத்தை சுரண்டி எடுப்பார்கள். அதை ஆசிட் டெஸ்ட் செய்வார்கள். இதிலும் 916 தரம் உறுதி செய்யப்பட்டால், அனைத்து நகைகளுக்கும் 916 தரத்துக்கான முத்திரை இட்டுத் தருவார்கள். இதில் ஏதாவது தரம் குறைந்த நகைகள் இருந்தால் அதை கண்டுபிடிக்க முடியாது'' என்றவர். ஹால்மார்க் சென்டர் செயல்படும் விதத்தையும் அங்கு நடக்கும் தவறுகளையும் எடுத்துச் சொன்னார்.


''ஹால்மார்க் முத்திரையை அரசு நிறுவனங்கள் நேரடியாக போட்டு தருவதில்லை. இந்த வேலையை லைசென்ஸ் பெற்ற தனியார்நிறுவனங்கள்தான் செய்கின்றன.


உள்ளூரில் கோல்டு டெஸ்ட் லேப் நடத்தி மூன்று ஆண்டுகள் அனுபவம் உடையவர்கள் ஹால்மார்க் சென்டர் அமைக்க முடியும். இதற்கு பிஐஎஸ்ன் வழிக்காட்டலின்படி, லேப் அமைக்க வேண்டும். இதற்கு பிஐஎஸ் 25%  மானியம் வழங்கும். இந்த ஹால்மார்க் லேப் அமைக்க ரூ.7580 லட்சம் வரை செலவாகும். என்றாலும், இந்த லேப்கள் மூலம் கிடைக்கும் வருமானம் மிகக் குறைவே.



zYrla7b.jpg

ஹால்மார்க் நகைகளை விற்பதற்கு நகைக்கடைகள் பிஐஎஸ்-ஸிடமிருந்து அனுமதி வாங்கவேண்டும். இதற்கு  மூன்று ஆண்டு வருமான வரிதாக்கல் செய்த விவரம், எந்த வகையான நகைகளை எந்த தரத்தில் விற்பனை செய்கிறார்கள் என்ற விவரத்தை தந்து, அனுமதி பெறலாம். பெரிய நகைக்கடைகள் வருமான வரி தாக்கல் விவரத்தை தந்துவிடும். ஆனால் , சின்ன சின்ன கடைகளால் தரமுடியாது. ஏனெனில் பெரும்பாலான நகைக் கடைகள் விற்பனை செய்யும் நகை களுக்கு முறையான ரசீது தருவதில்லை. வருமான வரியும் சரியாக செலுத்துவதில்லை.


பிஐஎஸ் லைசென்ஸ் பெற்ற கடைகளுக்கு மட்டும்தான் ஹால்மார்க் தர முத்திரையை போட்டுதர வேண்டும். ஆனால், சில ஹால்மார்க் சென்டர்கள் போட்டி காரணமாகவும், அதிக வருமானம் பார்க்கவும் அனுமதி பெறாத கடைகளின் நகைகளுக்கு முத்திரை போட்டு தருகின்றன. அதாவது, கூடுதலாக பணம் வாங்கிக்கொண்டு இதை செய்கின்றன. இது சட்டப்படி தவறுதான்'' என்றார்.


இந்த நிலையில், ஹால்மார்க் குறித்து பிஐஎஸ் வெளியிட்ட ஆணையை எதிர்த்து வழக்கு தொடுத்தது குறித்து கோவை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராமனிடம் கேட்டோம்.


''கடந்த மே மாதம் பிஐஎஸ் சட்டத்தில் (Bureau of Indian Standards Act)சில திருத்தங்களை செய்த பிஐஎஸ் அமைப்பு, ஹால்மார்க் முத்திரை இட்ட நகைகளை விற்பனை செய்யும்போது அந்த நகையின் தரத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால் அதற்கு அந்த கடைதான் முழுப் பொறுப்பு எனச் சொல்லியுள்ளது.

அடுத்து, பிஐஎஸ் முத்திரையிட்ட நகைகளில் ஏதாவது குறைபாடு இருந்தால் அல்லது நகையை வாங்கியபிறகு ஏதாவது தரக்குறைபாடு இருப்பதாக வாடிக்கையாளர்கள் புகார் தந்்தால், அந்த கடைக்கு அபாரதம் விதிக்கப்படும். நகைக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நகையை பிஐஎஸ் அதிகாரிகள் சோதனை யிடும்போது குறைபாடு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டாலும் அபராதம் விதிக்கப்படும். இப்படி மூன்று முறைக்கு மேல் அபராதம் செலுத்தும் கடைகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

பிஐஎஸ் சொல்லியுள்ள இந்த விஷயங்கள் எதுவுமே நடைமுறைக்கு சரிப்பட்டு வராது. அதாவது, எந்த நகைக் கடைக்காரரும் தனது நகையை நேரடியாக செய்வதில்லை. பொற் கொல்லர்கள் செய்துதரும் நகையை தயாரிப்பாளர்களிடம் இருந்து வாங்கி, வியாபாரிகள் விற்பனை செய்கிறார்கள். இந்த நகைகளுக்கு அரசு நிறுவனம் பிஐஎஸ் முத்திரை வழங்குகிறது. இதில் தரக்குறைவு ஏற்பட்டால் நகை வியாபாரி கள் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்?


நகைக் கடைகள் விற்பனை செய்யும் ஹால்மார்க் முத்திரையிட்ட நகைகளின் விவரம், அவற்றின் வரவு செலவு கணக்கு ஆகியவற்றை குறைந்தபட்சம் ஐந்தாண்டுகளுக்கு பாதுகாப்பாக வைக்கவேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், பல நகைக்கடைகளில் இன்னும் கம்ப்யூட்டர் இன்னும் வரவில்லை. இதில் எப்படி ஐந்தாண்டுகளுக்கான விவரங்களை பாதுகாப்பாக வைக்க முடியும்?  


gWJbfAq.jpg


இதுபோன்ற திருத்தங்கள் கொண்டுவருவது தவறில்லை. ஆனால், அதை நடைமுறையில் அமல்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். அல்லது இந்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்த கால அவகாசத்தை யாவது தரவேண்டும்' என்றார்.

நகை வாங்குபவர்கள் சேதாரம் குறைவாக உள்ளதா, கிஃப்ட் தருகிறார்களா, அதிக டிசைன்கள் உள்ளதா என்பதை கவனிப்பதோடு,  தங்கத்தின் தரம் குறித்தும் கொஞ்சம் அக்கறை கொள்வது நல்லது. அதாவது, உங்களுக்கு தெரிந்த நம்பிக்கையான கடைகளில் நகை வாங்குவது நல்லது.

ஹால்மார்க் முத்திரையில் இவ்வளவு பிரச்னை இருக்கிறதே என்று நினைத்து அதைத் தவிர்க்க வேண்டாம். ஹால்மார்க் முத்திரை இருந்தால்தான் தரக்குறைவு இருப்பின் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும். இந்த முத்திரை இல்லையெனில் இது குறித்து எங்குமே முறையிட முடியாது என்பதை மறந்துவிடக் கூடாது.

அதேபோல, ஹால்மார்க் நகையில் அந்த கடையின் லைசென்ஸ் எண் இருக்கும். நகையில் உள்ள எண் அந்தக் கடையினுடையதுதானா என்பதையும் உறுதி செய்துக்கொள்வது நல்லது.

Friday, June 27, 2014

கத்தார் அல் பனார் அரங்கில் நடைபெறும் அஷ்ஷேய்க் அப்துல் பாஸித் புகாரி அவர்களின் சொற்பொழிவு நேரடி அலைவரிசை இல் நன்றி: சபீக் புழுதிவயல்

கத்தார் அல் பானார் அரங்கில் நடைபெறும் அஷ்ஷேய்க் அப்துல் பாஸித் புகாரி அவர்களின் சொற்பொழிவு நேரடி அலைவரிசை இல் 

நன்றி: சபீக் புழுதிவயல் 

Sunday, April 27, 2014

அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட மகள்: அடித்து துவைத்த தாய் (வீடியோ இணைப்பு)

கரீபியன் தீவைச் சேர்ந்த பெண்மணி தனது மகளை பெல்ட்டால் அடித்த காணொளி இணையதளத்தில் வெளியாகி, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டிரினிடாட் அண்ட் டொபாகோ நாட்டை சேர்ந்த பார்ட்லெட் என்ற பெண்மணி தனது 12 வயது மகள், அரை நிர்வாண புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளாதாக கூறி பெல்ட்டால் அடித்துள்ளார்.
தனது மகளை பெல்டால் அடித்த இந்த 6 நிமிட காணொளி தற்போது இணையதளத்தில் வெளியாகி இதுவரை 43,000 நபர்கள் கண்டுள்ளனர்.
இந்த காணொளியை கண்டவர்களில் சிலர், தாயின் தரப்பில் நியாயம் உள்ளதாகவும், மேலும் பலர் இது முறைகேடாக நடந்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள்.
இதனையடுத்து பார்ட்லெட்யின் மற்ற இரு மகள்கள், இணையதளத்தில் மற்றொரு காணொளி வெளியிட்டுள்ளார்கள். இதில் பார்ட்லெட் ஒரு நல்ல தாய் என்றும், மேலும் தங்கள் அக்காவின் நன்மைக்காகவே இவ்வாறு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
இதுகுறித்து பார்ட்லெட் கூறுகையில், தனது மகளை நல்வழியில் கொண்டு செல்வதற்காக சிறைக்கு செல்ல கூட தயராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Saturday, January 4, 2014

இஸ்ரோ எதிர்நோக்கும் ஜி.எஸ்.எல்.வி. சவால்!

இஸ்ரோ எதிர்நோக்கும் ஜி.எஸ்.எல்.வி. சவால்!

இந்திய விண்வெளித் துறையின் கவனம் எல்லாம் இப்போது ஜனவரி 5-ல்தான் குவிந்து கிடக்கிறது. அன்றுதான் ஜி. எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது.
சுமார் இரண்டு டன் எடை கொண்ட ஜிசாட் -14 என்னும் செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரே செலுத்தும் திறன்கொண்ட இந்த ராக்கெட் வெற்றி பெற்றாக வேண்டுமே என நம்முடைய விண்வெளித் துறையினர் கவலைகொண்டிருந்தால் அதில் வியப்பில்லை. ஏனெனில், இதுவரை இந்த வகை ராக்கெட்டை ஏழு தடவை உயரே செலுத்தியதில் மூன்று தடவைதான் வெற்றி கிடைத்திருக்கிறது.
பி.எஸ்.எல்.வி. - ஜி.எஸ்.எல்.வி.என்ன வேறுபாடு?
உள்ளபடி நம்மிடம் இரண்டு வகை ராக்கெட்டுகள் உள்ளன. ஒன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட். இது பொதுவில் சுமார் 400 அல்லது 600 கி.மீ. உயரத்தில் இரண்டு டன்னுக்கும் குறைவான செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்லும் திறன்கொண்டது.
1993-ல் தொடங்கி இதுவரை ஒரே ஒரு தோல்வியை மட்டுமே கண்டுள்ளது. 24 தடவை வெற்றி கண்டுள்ளது. வெற்றி மேல் வெற்றியைக் குவித்துள்ள இந்த வகை ராக்கெட் மிக நம்பகமானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான், சில வெளி நாடுகளும் தங்களது செயற்கைக்கோள்களை இந்த ராக்கெட் மூலம் செலுத்தச் செய்துள்ளன. இதன் திறன் இரண்டு டன் என்றாலும், இதுவரை அதிகபட்சமாக 1,850 கிலோ கிராம்வரைதான் இது சுமந்து சென்றிருக்கிறது.
ஆனால், இந்தியா சிறியசெயற்கைக்கோள்களை மட்டுமின்றி எடை மிக்க செயற்கைக்கோள்களையும் தயாரித்துவருகிறது. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள். எடை அதிகம் கொண்டவை. உதாரணமாக, இந்தியா தயாரித்த ஜிசாட் -8 செயற்கைக்கோளின் எடை மூன்று டன். இவை பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 35 ஆயிரம் கி.மீ. உயரத்தில் இருக்க வேண்டியவை. இந்தவகை செயற்கைக்கோள்களை அந்த அளவு உயரத்துக்குக் கொண்டுசெல்ல இந்தியாவிடம் இப்போதைக்கு சக்திமிக்க ராக்கெட் கிடையாது. ஆகவேதான் ஜி.எஸ்.எல்.வி-யை நோக்கி நாம் கவனம் செலுத்துகிறோம்.
இப்போது என்ன செய்கிறோம்?
இப்போது நாம் தயாரித்துவரும் எடை மிக்க செயற்கைக்கோள்கள் அனைத்தும் தென் அமெரிக்காவில் பிரெஞ்சு கயானாவில் உள்ள கூரூ விண்வெளிக் கேந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ஐரோப்பிய விண்வெளி அமைப்பின் ஏரியான் ராக்கெட் மூலமே உயரே செலுத்தப்பட்டு வருகின்றன. இது பல ஆண்டுகளாக நடந்துவருகிறது. இந்தியாவின் அவ்வகை செயற்கைக்கோள்களை கூரூவுக்கு எடுத்துச் செல்லும் செலவு, உயரே செலுத்தித் தருவதற்கு நாம் அளிக்கும் கட்டணம் ஆகிய வகையில் செலவு அதிகம். ஆகவே, சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கும் திட்டத்தில் இந்தியா ஈடுபட்டது.
கிரையோஜெனிக் இன்ஜின் தரும் சாதகம்
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டையே பெரிய அளவில் செய்தால் அது சக்திமிக்கதாகிவிடாதா என்று கேட்கலாம். அது சாத்தியமானதல்ல. ஒரு ராக்கெட்டில் அதிக உந்து திறனை அளிக்கின்ற இன்ஜினைப் பொருத்தினால்தான் அது அதிக சக்தி பெறும். அந்த வகை இன்ஜின் கிரையோஜெனிக் இன்ஜின் எனப்படுகிறது.
ஆக்சிஜன், ஹைட்ரஜன் வாயுக்களை நமக்குத் தெரியும். இந்த இரு வாயுக்களையும் தனித்தனியே திரவமாக்கி, அந்த இரண்டும் சேர்ந்து எரியும்படி செய்தால் அது அதிக உந்து திறனை அளிக்கும். ஆக்சிஜன் வாயுவை மைனஸ் 223 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். ஹைட்ரஜன் வாயுவை இதேபோல மைனஸ் 253 டிகிரி அளவுக்குக் குளிர்வித்தால் அது திரவமாகிவிடும். இந்த வாயுக்களை இவ்விதம் குளிர்விப்பது பெரிய பிரச்சினை அல்ல. கடும் குளிர் நிலையில் இருக்கிற இந்த திரவங்களைப் பயன்படுத்தும் ராக்கெட் இன்ஜினை உருவாக்குவதில்தான் பல பிரச்சினைகள் உள்ளன. இந்த இரண்டையும் பயன்படுத்துகிற ராக்கெட் இன்ஜின் கிரையோஜெனிக் (கடும் குளிர்விப்பு நிலை) ராக்கெட் இன்ஜின் எனப்படுகிறது.
ராக்கெட் என்பது ஒன்றின்மீது ஒன்று பொருத்தப்பட்ட மூன்று அடுக்கு ராக்கெட்டாக அல்லது இரண்டு அடுக்கு ராக்கெட்டாக இருக்கும். ராக்கெட்டின் முனையில் இடம்பெறும் அடுக்கானது இவ்விதம் கிரையோஜெனிக் இன்ஜின் பொருத்தப்பட்டதாக இருக்கும்.
உலகில் நான்கு டன் அல்லது ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோள்களைச் செலுத்தும் சக்திமிக்க ராக்கெட்டுகள் அனைத்திலும் கிரையோஜெனிக் இன்ஜின்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்தவகை இன்ஜின்களை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தைக் காசு கொடுத்து ரஷ்யாவிடமிருந்து வாங்குவதற்கு இந்தியா 1990-களில் முயன்றது. ஆனால் அமெரிக்கா குறுக்கிட்டு, ரஷ்யாவிடமிருந்து இத்தொழில்நுட்பம் கிடைக்காதபடி தடுத்துவிட்டது.
இந்நிலையில், இந்தியா கடந்த பல ஆண்டுகளாகப் பாடுபட்டு சொந்தமாக கிரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெருமளவு வெற்றியும் கண்டுள்ளது. இவ்வித இன்ஜின்கள்குறித்து ஆராய்ச்சி நடத்தவும் மற்றும் இவற்றைச் செயல்படுத்தி சோதிப்பதற்காகவும் ஒரு கேந்திரம் தமிழகத்தில் மகேந்திரகிரி என்னுமிடத்தில் உள்ளது.
கிரையோஜெனிக் சவால்கள்
கிரையோஜெனிக் இன்ஜின்களை உருவாக்குவதில் பல பிரச்சினைகள் உள்ளன. ராக்கெட் இன்ஜினில் இந்த இரு திரவங்களையும் தனித்தனித் தொட்டிகளில் அதே குளிர் நிலையில் வைத்திருக்க வேண்டும். கொஞ்சம் விட்டால் இரண்டும் ஆவியாகிவிடும். ஆகவே, ராக்கெட் கிளம்புவதற்குச் சற்று முன்னர்
தான் இந்த இரு திரவங்களையும் நிரப்புவர். ராக்கெட் கிளம்புவதற்குள் எப்படியும் கொஞ்சம் ஆவியாகிவிடும் என்பதால், சற்று அதிகமாகவே நிரப்புவர். இந்த இரு தொட்டிகளிலிருந்தும் திரவ ஆக்சிஜனும் திரவ ஹைட்ரஜனும் குறிப்பிட்ட விகிதத்தில் இன்ஜின் அறைக்கு வர வேண்டும். தொட்டிகளிலிருந்து இன்ஜின் அறைக்கு இவற்றைச் செலுத்துவதற்கான பம்புகள், வால்வுகள், மோட்டார்கள் ஆகியவை கடும் குளிர் நிலையைத் தாங்கும் திறன்கொண்ட விசேஷ உலோகங்களால் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். கடும் குளிர்நிலையில் சாதாரண உலோகங்கள் பொடிப் பொடியாகிவிடும் அல்லது உருக்குலைந்துவிடும்.
இன்ஜின் அறையில் இரண்டும் கலந்துஎரியும்போது பயங்கர வெப்பம் தோன்றும்.அந்த வெப்பத்தினால் இன்ஜின் அறையின்உலோகத்தால் ஆன சுவர்கள் உருகிவிடக்கூடாது. இப்படிப் பல பிரச்சினைகள். இவற்றையெல்லாம் சமாளித்து இந்தியா உருவாக்கிய கிரையோஜெனிக் இன்ஜினைத் தரையில் நிலையாக வைத்து நடத்திய பரிசோதனைகளில் பல தடவை வெற்றி காணப்பட்டுள்ளது.
எடைமிக்க செயற்கைக்கோள்களைச் செலுத்துவதற்குப் பொதுவில் மூன்றடுக்கு ராக்கெட் பயன்படுத்தப்படும். சில நாடுகள் இரண்டு அடுக்கு ராக்கெட்டுகளைப் பயன்படுத்துகின்றன. இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட் மூன்று அடுக்கு ராக்கெட் ஆகும்.
இதில் மூன்றாவது அடுக்கில் பொருத்துவதற்காகத்தான் கிரையோஜெனிக் இன்ஜின் உருவாக்கப்பட்டது.முந்தைய அனுபவங்கள் இந்தியா சொந்தமாகத் தயாரித்த கிரையோஜெனிக் இன்ஜினை (மூன்றாவது அடுக்கில்) பொருத்தி 2010-ம் ஆண்டு ஏப்ரலில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து உயரே செலுத்தப்பட்டது. அந்த ராக்கெட்டின் முகப்பில் 2,220 கிலோ எடை கொண்ட ஜிசாட்-4 செயற்கைக்கோள் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த ராக்கெட் தோல்வியில் முடிந்தது. மூன்றாவது அடுக்கிலான கிரையோஜெனிக் இன்ஜின் செயல்படாமல் போனதே தோல்விக்குக் காரணம்.
இதன் பிறகு, அதே ஆண்டு டிசம்பரில் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட்டது. அப்போது வேறு காரணங்களால் அது திசை மாறியபோது, கடலுக்கு மேலாக நடு வானில் அழிக்கப்பட்டது. பிறகு, 2013 ஆகஸ்டில் மறுபடி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டைச் செலுத்த எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ராக்கெட்டை உயரே செலுத்துவதற்கு சுமார் ஒரு மணி நேரம் இருந்த சமயத்தில், ராக்கெட்டிலிருந்து ஏதோ ஒழுக்கு கண்டுபிடிக்கப்பட்டு ராக்கெட்டைச் செலுத்துவது ரத்துசெய்யப்பட்டது.
இப்படியான பின்னணியில்தான் வருகிற ஜனவரி 5-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் உயரே செலுத்தப்பட இருக்கிறது. ராக்கெட்டின் வெற்றி பெரிதும் கிரையோஜெனிக் இன்ஜினின் செயல்பாட்டைப் பொருத்தது எனலாம்.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஏன் 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த வேண்டும் என்று கேட்கலாம்.பல வீடுகளில் மாடியில் டி.வி. நிகழ்ச்சிகளைப் பெறுவதற்காகக் கிண்ண வடிவ ஆன்டெனா பொருத்தப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கலாம். பெரும்பாலும் இவை தென்கிழக்கு அல்லது
தென்மேற்கு திசையை நோக்கி அமைந்திருக்கும். இந்த ஆன்டெனா ஒன்றின் மையத்திலிருந்து அது நோக்கி இருக்கும் திசையை நோக்கிக் கற்பனையாகக் கோடு கிழித்தால், அது உயரே இருக்கின்ற ஒரு செயற்கைக்கோளில் போய் முடியும்.
அந்தக் குறிப்பிட்ட செயற்கைக்கோளிலிருந்துதான் அந்த ஆன்டெனா சிக்னல்களைப் பெறுகிறது. சிக்னல்கள் எப்போதும் நேர்க்கோட்டில் செல்பவை. ஆகவே, ஆன்டெனாவும் செயற்கைக்கோளும் எப்போதும் ஒன்றை ஒன்று பார்த்தபடியே இருந்தாக வேண்டும். ஆணியடித்து நிறுவப்பட்ட ஆன்டெனா போலவே வானில் அந்த செயற்கைக்கோளும் ஒரே இடத்தில் நிலையாக இருக்க வேண்டும். ஆனால், எந்த ஒரு செயற்கைக்கோளும் பூமியைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கும். நிலையாக இருக்க முடியாது. ஆனால், அது நிலையாக இருப்பது போன்று செய்ய முடியும்.
பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக்கொள்ள ஒருநாள் ஆகிறது. சரியாகச் சொன்னால், 23 மணி 56 நிமிஷம் 4 வினாடி ஆகிறது. ஆகவே, பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இருக்கின்ற ஒரு செயற்கைகோள் ஒன்று பூமியைச் சுற்ற மிகச்சரியாக அதே நேரத்தை எடுத்துக்கொண்டால், அது பூமியைச் சுற்றவும் செய்யும்; ஒரே இடத்தில் இருப்பதுபோலவும் ஆகிவிடும். அந்த அளவில் ஒரு செயற்கைக்கோள் 35,786 கி.மீ. உயரத்தில் இருக்கும்படி செய்தால், அது பூமியை ஒரு முறை சுற்றி முடிக்க மிகச் சரியாக மேலே குறிப்பிட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளும். இது இயற்கையின் நியதி. ஆகவேதான் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் அந்த அளவு உயரத்துக்குச் செலுத்தப்படுகின்றன.
பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஜிசாட்-14 போன்ற செயற்கைக்கோள்களை 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்த முடியாதா என்று கேட்கலாம். ஏற்கெனவே கூறியபடி அதன்
திறன் சுமாரானது. மேலும், அதிக உயரத்துக்கு அது செல்ல வேண்டுமானால், அது ஏற்றிச் செல்லும் சுமையைக் குறைத்தாக வேண்டும்.
கடந்த பல ஆண்டுகளில் அந்தவகை ராக்கெட் இரண்டு முறைதான் 35 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்துக்குச் செலுத்தப்பட்டது. அதாவது, 2002-ம் ஆண்டில் அது மெட்சாட் (அதன் பெயர் பின்னர் கல்பனா என்று மாற்றப்பட்டது) எனப்பட்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்துக்குக் கொண்டுசென்று செலுத்தியது. அதன் எடை 1,060 கிலோ. கல்பனா செயற்கைக்கோளுடன் ஒப்பிடுகையில், ஜிசாட்-14 செயற்கைக்கோளின் எடை சுமார் இரண்டு டன். பின்னர் 2011-ம்
ஆண்டில் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் ஜிசாட்-12 செயற்கைக்கோள் அந்த உயரத்துக்குச் செலுத்தப்பட்டது. அதன் எடை 1,400 கிலோ கிராம்.
ஏன் முடியாது?
“பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் 2008-ல் சந்திரனுக்கு சந்திரயான் விண்கலத்தை அனுப்பினோமே, அதே ராக்கெட் மூலம் அண்மையில் செவ்வாய்க்கு மங்கள்யானை அனுப்பி சாதனை புரிந்தோமே?” என்றும் கேட்கலாம். இந்த இரண்டுமே 1,400 கிலோ கிராம் எடைக்குக் குறைவு. இந்த இரண்டையும் பி.எஸ்எல்.வி. ராக்கெட் சுமார் 250 கிலோ மீட்டர் உயரத்துக்குக் கொண்டு சென்று, பூமியை நீள் வட்டப் பாதையில் சுற்றும்படி செய்தது. இது அந்த ராக்கெட்டின் திறனுக்கு உட்பட்டதே.
இவை உயரே சென்ற பின்னர், விசேஷ உத்திகளைப் பின்பற்றி - இயற்கையின் சக்தியைப் பயன்படுத்தி - சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பிவைத்தோம். வேறுவிதமாகச் சொன்னால், பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டானது அவற்றை நேரடியாகச் சந்திரனுக்கோ செவ்வாய்க்கோ அனுப்பிவிடவில்லை. சக்திமிக்க ராக்கெட் அப்போது நம்மிடம் இருந்திருக்குமானால், அவற்றை நேரடியாகவே சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் அனுப்பியிருக்க முடியும்.எனினும், சுமாரான திறன்கொண்ட ராக்கெட்டைப் பயன்படுத்தி விசேஷ உத்திகளைக் கையாண்டு நாம் சாதனை படைத்தோம் என்பது பெருமைக்குரிய விஷயமே.
ஒரு ராக்கெட் அதிகத் திறன் கொண்டதாக இருந்தால்தான் அது அதிக உயரத்துக்குச் செல்லும். அதிக வேகத்துடன் பாயும். அத்துடன் அதிக எடைகொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தும்.
இப்போது செலுத்தப்பட உள்ள ஜி.எஸ்.எல்.வி. (மார்க் 2) ராக்கெட்கூட நமக்குப் போதாது. ஆகவேதான் இதைவிட இன்னும் திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி - மார்க் 3 ராக்கெட் உருவாக்கப்பட்டுவருகிறது. இது இன்னும் சோதித்துப் பார்க்கும் கட்டத்தை எட்டவில்லை. இது நான்கு முதல் ஐந்து டன் எடைகொண்ட செயற்கைக்கோளை 35 ஆயிரம் கி.மீ. உயரத்துக்குச் செலுத்தும் திறன் கொண்டது. நமக்கு இப்போது அந்த அளவு எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே செலுத்தியாக வேண்டிய அவசியம் உள்ளது.
தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றன. முதலாவதாக, நாம் டி.வி-யில் பார்க்கிற நிகழ்ச்சிகள் செயற்கைக்கோள் மூலமாகத்தான் நம்மை வந்தடைகின்றன. பலருக்கும் இது தெரிந்திருக்கலாம். ஆனால், இவ்வித செயற்கைக்கோள்கள் மேலும் பல பணிகளைச் செய்கின்றன. பங்குச்சந்தை வர்த்தகம் இவை மூலம்தான் நடைபெறுகின்றன. பல தனியார் நிறுவனங்களின் தகவல் தொடர்புப் பணிகள் இவற்றின் மூலமாகத்தான் நடைபெறுகின்றன. ஒரு மருத்துவமனையில் நடக்கின்ற அபூர்வமான அறுவைசிகிச்சையை வேறு மருத்துவமனைகளில் நேரடியாகக் காண உதவுகின்றன. கல்வித் துறையிலும் இவற்றின் பங்கு உள்ளது. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் இல்லாவிடில், நாட்டில் பல முக்கியப் பணிகள் ஸ்தம்பித்துவிடும் என்ற நிலை உள்ளது.
நாட்டில் தகவல் தொடர்புத் தேவைகள் அதிகரித்துவருகின்றன. பொருளாதார நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன. ஆகவேதான் கடந்த பல ஆண்டுகளில் மேலும் மேலும் இவ்வித செயற்கைக்கோள்கள் உயரே செலுத்தப்படுகின்றன. இப்போது பூமியின் நடுக்கோட்டுக்கு மேலே இந்தியாவைப் பார்த்த மாதிரியில் நம் தலைக்குமேலே 35 ஆயிரம் கிலோமீட்டர் உயரத்தில் 13 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் செயல்பட்டுவருகின்றன. ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இந்தியாவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனாலும் இது போதவில்லை.
இதில் இரண்டு விஷயங்கள் உள்ளன. முதலாவதாக, ஒரு தகவல் தொடர்பு செயற்கைக்கோளின் ஆயுள் சுமார் 12 ஆண்டுகள். ஆகவே, ஏற்கெனவே உயரே உள்ள ஒரு செயற்கைக்கோளின் ஆயுள் முடிந்துவிட்டால், அந்த இடத்தை நிரப்பப் புதிதாக ஒன்றைக் காலாகாலத்தில் செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, நாட்டில் புதிது புதிதாக டி.வி. சேனல்கள் தோன்றிவருகின்றன. அத்துடன் கிண்ண வடிவ ஆன்டெனாக்கள் மூலம் டி.வி. சேனல்களை அளிக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துவிட்டன. இவை தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் தங்களுக்கு மேலும் டிரான்ஸ்பாண்டர்களை ஒதுக்க வேண்டும் என்று வற்புறுத்திவருகின்றன. வேறு தரப்பினரும் இவ்விதம் கோருகின்றனர்.
தகவல் தொடர்பு செயற்கைகோள்களில் உள்ள டிரான்ஸ்பாண்டர் என்னும் கருவிகளே கீழிருந்து டி.வி. நிறுவனங்கள் போன்றவை அனுப்பும் சிக்னல்களைப் பெற்று, அவை இந்தியா முழுவதிலும் கிடைக்கும்படி செய்கின்றன.
இப்பிரச்சினையைச் சமாளிக்கும் நோக்கில்தான் இஸ்ரோ நிறுவனம் மேலும் அதிகஎடைகொண்ட, மேலும் அதிக டிரான்ஸ்பாண்டர்களைக்கொண்ட செயற்கைக்கோள்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. உதாரணமாக, 1995-ல் செலுத்தப்பட்ட இன்சாட்-2 சிசெயற்கைக்கோளின் எடை 2,106 கிலோ கிராம். 2003-ல் செலுத்தப்பட்ட 3 ஏ செயற்கைக்கோளின் எடை 2,950 கிலோ கிராம். இத்துடன் ஒப்பிட்டால் 2012-ல் செலுத்தப்பட்ட ஜிசாட் -10 செயற்கைக்கோளின் எடை 3,455 கிலோ கிராம். இவற்றில் இடம்பெற்ற டிரான்ஸ்பாண்டர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்துவந்துள்ளது. இன்சாட் 2 சி செயற்கைக்கோளில் 20 டிரான்பாண்டர்களே இடம் பெற்றிருந்தன. ஆனால், ஜிசாட்- 10 செயற்கைக்கோளில் 30 டிரான்ஸ்பாண்டர்கள் இடம்பெற்றிருந்தன. இவை அனைத்தும் ஏரியான் ராக்கெட் மூலமே செலுத்தப்பட்டவை.
அடுத்த சில ஆண்டுகளில் செலுத்தப்பட இருக்கும் ஜிசாட்-11 செயற்கைக்கோள் நாலரை டன் எடைகொண்டதாகவும் 40 டிரான்ஸ்பாண்டர்களைக் கொண்டதாகவும் விளங்கும். ஒருவேளை இது இந்தியாவின் ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் ஹரிகோட்டாவிலிருந்து செலுத்தப்படலாம். எடைமிக்க செயற்கைக்கோள்களைத் தயாரிக்கும் திறன் இஸ்ரோவிடம் உள்ளது.
அன்றுமுதல் இன்றுவரை இது விஷயத்தில் ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இஸ்ரோ, ஆரம்பம் முதல் ஒரு தெளிவான கொள்கையைப் பின்பற்றி வந்துள்ளது. அதாவது, செயற்கைக்கோள் தயாரிப்பையும் ராக்கெட்டுகளை உருவாக்குவதையும்
ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டுக்கொள்ளவில்லை. சக்திமிக்க ராக்கெட்டுகளை உருவாக்கிய பின்னரே, பெரிய செயற்கைக்கோள்களைத் தயாரிப்பது என்ற கொள்கையைப் பின்பற்றவில்லை. இஸ்ரோ உருவாக்கிய ஆர்யபட்டா என்னும் முதல் செயற்கைக்கோளின் எடை 360 கிலோ கிராம். அதைச் செலுத்த அப்போது இந்தியாவிடம் ராக்கெட் கிடையாது. 1975-ல் ஆர்யபட்டா ரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, ரஷ்ய ராக்கெட் மூலம் உயரே செலுத்தப்பட்டது. அதற்கு ஐந்து ஆண்டுகள் கழித்து 1980-ம் ஆண்டில் இந்தியா உருவாக்கிய எஸ்.எல்.வி. என்னும் எளிய ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ரோகிணி செயற்கைக்கோளின் எடை 30 கிலோ கிராம்.
செயற்கைக்கோள் தயாரிப்பில் காணப்பட்ட வேகமான முன்னேற்றத்தை நம்மால் ராக்கெட் தயாரிப்பில் காண முடியாமல் போய்விட்டது. இப்போது செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் இந்திய கிரையோஜெனிக் இன்ஜினின் திறன் உறுதிப்படுத்தப்படுமானால், ராக்கெட் துறையில் இனி வேகமான முன்னேற்றத்தைக் காண இயலும்.
என். ராமதுரை, கட்டுரையாளர்,
மூத்த பத்திரிகையாளர்,
தொடர்புக்கு: n.ramadurai@gmail.com